Contact Us

Name

Email *

Message *

Thursday 28 November 2013

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) - தெய்வ தத்வம் தெய்வங்கள்.

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தமாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் 'த்ரயீ' என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் என்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக 'சிவ' என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் 'மெய்ப்பொருள்'என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக - மெய்யாக - வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத (ன்) நாமம் நமச்சிவாயவே


வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு சிவ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) "யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்" என்கிறார்.


அனைவருக்குமான நாமம்

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் 'நல்வழி' என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், "சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க் (கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை" என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.


வைஷ்ணவர் கூறும் பெருமை

ஸ்ரீமத் விஷ்ணு பாகவத்தில் சிவ நாமாவின் பெருமை வந்திருப்பது போலவே ஸ்ரீவைஷ்ணவர்கள் ரொம்பவும் போற்றி மரியாதை செய்கிற ஒருவரும் அந்த நாமாவுக்கு உரியவரான பரமேஸ்வரனின் உயர்வைச் சொல்லியிருப்பதாக எனக்கு ஒரு அபிப்ராயம். அவர் என்னமோ சிவனை மட்டந் தட்டினதாகத்தான் கதை சொல்கிறவர்கள் சொன்னாலும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.

அவர் ராமாநுஜாசார்யாருக்கு மிகவும் முக்யமாக இருக்கப்பட்ட சிஷ்யர்களில் ஒருவர். கூரத்தாழ்வார் என்று பேர். பேர் என்றால் அப்பா அம்மா வைத்தது இல்லை. ஸ்ரீவத்ஸாங்கர் என்பதே அவர் பேர். தமிழில் திருமறுமார்பன் என்பார்கள். காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரத்தைச் சேர்ந்தவராதலால் கூரத்தாழ்வார் என்று பெயர் வந்தது.

ராமாநுஜர் காலம் வரையில் அநேகர் சிவன், விஷ்ணு இருவரையும் உபாஸிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு ஊர் என்றாலே அதில் 'ஈசான்யம்' என்கிற வடகிழக்கில் என்கிற வடகிழக்கில் ஈஸ்வரன் கோவிலும் மேற்கில் பெருமாள் கோவிலும் இருக்க வேண்டுமென்று விதி. அப்படியிருப்பதில் அநேகமாக எல்லாரும் கார்த்தாலே பெருமாள் கோவில், ஸாயரக்ஷை சிவன் கோவில் என்று போவார்கள். கொஞ்சம் கொஞ்சம் தீவ்ரமாக சிவனையே சொல்கிறவர்கள், விஷ்ணுவையே சொல்கிறவர்கள் என்று இருந்தாலுங்கூட ஒன்றை இழிவு பண்ணி ஒதுக்கி இன்னொன்றை மாத்திரம் உயர்த்தி வைக்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கிறபோது ராமாநுஜர், 'விஷ்ணுவைத் தவிரக் கடவுள் இல்லை; தேவதாந்தரமே கூடாது' என்பதை ஒரு மதமாகவே பண்ணி, சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது ஆட்சி பண்ணிய சோழராஜாவும் வித்வான்களும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள். ராமாநுஜர் சொல்வதற்கு என்ன சாஸ்த்ர ஆதாரம் என்று அவரையே கூப்பிட்டுக் கேட்போம் என்று முடிவு பண்ணினார்கள். இதற்காக வித்வத் ஸதஸ் கூட்ட ஏற்பாடாயிற்று. அப்போது தலைநகராயிருந்தது கங்கைகொண்ட சோழபுரம். கும்பகோணத்துக்கு வடக்கே பத்து மைலில் இருப்பது. ராமாநுஜாசாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். இங்கிருந்து அங்கே ராஜா ஆள் அனுப்பினான்.

ஆள் போய் விஷயத்தைச் சொன்னான். அப்போது ராமாநுஜரோடு கூட இருந்த கூரத்தாழ்வார், "ஸ்வாமி!ராஜாவோ சைவன்; சிவாலயங்கள் கட்டியிருப்பவன். தாங்களானால் சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்கிறீர்கள். அதனால் உங்களை அழைத்து தண்டனை கொடுப்பதற்கே 'வித்வத் ஸதஸ்' என்று சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறான். வருகிற ஆபத்து எனக்கு வரட்டும்;தங்களுக்கு வேண்டாம். தாங்கள் என்னுடைய வெள்ளை வேஷ்யைக் கட்டிக்கொண்டு சோழராஜ்யத்தை விட்டே போய்விடுங்கள். தங்களுக்காக நான் தங்களுடைய காஷாயத்தைப் போட்டுக்கொண்டு, நான்தான் தாங்கள் என்று சொல்லிக்கொண்டு ராஜாவிடம் போகிறேன்" என்றார்.

அப்படியே செய்தார்கள். ராமாநுஜர் ராத்திரியோடு ராத்ரியாக முதலில் ஸ்ரீரங்கத்துக்கு இருபத்தெட்டு மைலிலுள்ள திருநாராயணபுரத்துக்கும், அப்புறம் அங்கிருந்து ரொம்ப தூரத்துக்கு அப்பாலுள்ள மைஸூர் திருநாராயணபுரத்துக்கும் போனார். கூரத்தாழ்வார் கங்கைகொண்ட சோழபுர ஸதஸ்ஸுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே கூடியிருந்த வித்வான்கள், 'சிவன் மாதிரி, சிவனுக்கு ஸமமாக விஷ்ணுவோ, இன்னொரு தெய்வமோ இருக்கிறது' என்று வேண்டுமானால் மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்; ஆனால் தெய்வங்களுக்குள் உசத்தி-தாழ்த்தி சொல்வதாவது? சிவனைவிட விஷ்ணு உசத்தி என்றால் எப்படி? அப்படித்தான் என்றால் சாஸ்த்ரங்களைக் காட்டி நிரூபிக்கட்டும் என்று தீர்மானித்தார்கள். அதனால் "சிவாத் பரதரம் நாஸ்தி", அதாவது 'சிவனுக்கு மேலே உயர்ந்த பொருள் இல்லை'என்று ஓலையில் எழுதினார்கள். வித்வான்களுக்கு ஓலையை அனுப்புவது;இந்த அபிப்ராயத்தை ஒப்புக்கொண்டால் அவர்கள் கையெழுத்துப் போடட்டும்; ஆக்ஷேபித்தால் சாஸ்த்ரம் காட்டி விளக்கட்டும் என்று முடிவு செய்தார்கள்.

கூரத்தாழ்வாரிடம் ஓலை காட்டப்பட்டது.

அவர் அதிலே என்னவோ எழுதித் திருப்பிக் கொடுத்தார். என்ன எழுதினார் என்றால், கையெழுத்துப் போடவில்லை "அஸ்தி த்ரோணம் அத: பரம்" என்று எழுதியிருந்தார்.

"சிவனுக்கு மேல் உசத்தியான ஒன்று இல்லை"என்றுதானே ஓலையில் முதலில் எழுதப்பட்டிருந்தது? அதற்கு மேல் த்ரோணம் இருக்கிறது" என்று இவர் இப்போது எழுதினதிற்கு அர்த்தம். "அஸ்தி த்ரோணம் அத: பரம்" என்றால் "அதற்கு (சிவனுக்கு) மேலானதாக த்ரோணம் இருக்கிறது" என்று அர்த்தம்.

'சிவ' என்றால் ஈஸ்வர நாமா என்பது மட்டுமில்லை. அதற்கு இன்னொரு அர்த்தம், 'மரக்கால்'என்பது. மரக்கால் - படி - ஆழாக்கு என்பதில் மரக்காலுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் 'சிவம்' என்று பெயர். மரக்காலைப்விடப் பெரிய அளவு ஒன்று உண்டு. தமிழில் அதற்குப் பதக்கு என்று பேர். ஸம்ஸ்க்ருதத்தில் இது 'த்ரோணம்' எனப்படும்.

'சிவ' என்பதற்குப் இரண்டு அர்த்தமிருப்பதில் இவர் சிலேடையாக 'சிவபெருமான்' என்பதைத் தள்ளிவிட்டு, 'மரக்கால்' என்பதாக எடுத்துக்கொண்டு, 'ஏன் மரக்காலும் மேலே எதுவும் இல்லாமல்? பதக்கு இருக்கே!' என்று எடுத்துக்காட்டி எழுதிவிட்டார்.

"ராஜ ஸமூஹம்; அநேக வித்வான்கள் கூடியிருக்கிற கௌரவமான ஸதஸ்; அதிலே ஸீரியஸாக சாஸ்த்ரார்த்தங்களைக் கட்டாமல் குறும்பாக, 'மரக்காலை விடப் பதக்கு பெரிசு' என்று இவர் எழுதியிருக்கிறாரே!" என்று எல்லாருக்குமே இருந்தது. ராஜாவுக்குக் கோபம் வந்து, கடுமையாக சிக்ஷை  பண்ணினான் என்று கதை போகிறது.

எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் கூரத்தாழ்வார் குறும்பு பண்ணவில்லை;சிவனே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும், வேதத்திலுள்ள ருத்ர ஸூக்தமுமே ஒப்புக்கொள்ளும்படியான ஒரு உண்மையைத் தான் "அஸ்தி த்ரோணம் அத: பரம்" என்பதில் உள்ளார்த்தமாக வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

'சிவ' என்பதற்கு அவர் இரண்டர்த்தம் பண்ணிக் கொண்டதாகத்தான் இதுவரை நினைக்கப்பட்டிருக்கிறது. மரக்கால் என்று அர்த்தம் பண்ணினார் என்று நினைத்தே ராஜா சிக்ஷித்தான். எனக்கோ, 'அஸ்தி த்ரோணம் அத: பரம்' என்பதில் 'சிவ' என்பதற்குப் பரமசிவனுக்கு வேறாக இன்னொன்றை (மரக்காலை) அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்; 'த்ரோணம்' என்பதற்குத்தான் பதக்கு என்றில்லாமல் வேறே அர்த்தம் செய்து கொள்ளணும் என்று தோன்றுகிறது.

என்ன அர்த்தம்?

த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் 'ஆத்மார்ப்பண ஸ்துதி' என்று செய்திருக்கிறார். இதற்கு 'உன்மத்த பஞ்சாசத்' என்றும் காரணப்பெயர் உண்டு*.

அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்
ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி
:*

என்கிறார். "பரமேஸ்வரா! உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது" என்கிறார்.

சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது! ஆகையால் "சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை; சிவாத் பரதரம் நாஸ்தி" என்றால் எப்படி ஸரியாகும்? அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!" இருக்கிறது"என்பதை அடித்துச் சொல்லவே "அஸ்தி" என்று ஆரம்பித்து,  "அஸ்தி த்ரோணம் அத: பரம்" என்றதாகத் தோன்றுகிறது.

'தரம்' என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். 'சிவாத் பரதரம் நாஸ்தி' என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.

சிவனுக்கு 'மேலே' தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது: "இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே - 'பகவத் தர:' என்று கம்பரேடிவ் 'தர' த்தையே சொல்லியிருக்கிறது!

எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

எப்படியா? "இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்" என்று ச்ருதியே சொல்கிறது.

'அபிமர்சனம்' என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே? இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் - அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்; தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது 'பகவத்தரம்' என்று ஆக்கிவிடுவான்!

அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட 'மேல்':  'சிவாத் பரதரம்' தான்.

இந்த அபிப்ராயங்களை மனஸில் வைத்துக் கொண்டே, ஆனாலும் தன்னுடைய ஆசார்யனுடைய அபிப்ராயத்துக்கு வேறேயாக வெளிப்படச் சொல்லக் கூடாது; சொல்லாமல் அவருக்காக என்ன தண்டனையானாலும் வாங்கிக் கொள்வது என்றே கூரத்தாழ்வார் இரண்டு அர்த்தத்தில் "அஸ்தி த்ரோணம் அத:பரம்" என்று சொன்னதாக வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்னஞ்சிறிய பூவாக இருந்தால்கூட ஸரி, தன்னிடம் அது வந்துவிட்டது என்றால் அதைத் தன்னிலும் உசத்தியான மஹிமையுள்ளதாகப் பண்ணிவிடுகிற ஒளதார்யம் (உதார குணம்) உடையவர் பரமசிவன் என்பது அந்த வைஷ்ணவர் வார்த்தையால் தெரிவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்படி அவனை எப்போ பார்த்தாலும் தொட்டுப் பூஜை பண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா? இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே? அதனாலே அவனை ஸ்பரிசித்து, ஒட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்கால்தான் பண்ணியாகணும். இந்த நாக்கிலேதான் அவன் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அவனை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.

அதனால் இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம். பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் வஸ்து இருக்கிறது. அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை. நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். கஷ்டமே இல்லை. இரண்டே எழுத்து. தேஹத்தில் உயிர் போலவும், கோயிலில் மஹா லிங்கம் போலவும், வேதங்களின் மத்தியில் ஜீவரத்னமாயிருக்கும் அதை நாம் என்ன பண்ணவேண்டும்? பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸாய்  நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும்!

மநுஷ்யனுக்கு மட்டும் இது birth right (பிறப்புரிமை)! வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம்! இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே! வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்! இதைச் செய்யாவிட்டால், 'வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை' என்று பரமேஸ்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார்! இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்துவிடும்.

பரமேஸ்வர ஸ்வரூபத்தை நாம் பார்க்க முடியுமா? விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா? இந்த நாமா இருக்கிறதே, இதுவும் ஸாக்ஷாத் அவனேதான். இதை நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.

அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் 'சிவ' என்று இரண்டு அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் சிவம், மங்களம், கல்யாணம் தழைக்கச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment