Contact Us

Name

Email *

Message *

Wednesday 11 June 2014

குமார ஸம்பவக் கதை

ரு யஜமானன் கட்டளை இடுவது போன்று பேசுவது வேதம். இது ‘ப்ரபு ஸம்ஹிதை’. ‘சத்தியம் பேசு, தர்மமாக நட’ என்று ஆக்ஞை பிறப்பிக்கும். இதையே நீதிமானான நண்பன் தர்மத்தைச் சற்று வெளிப்படையாக வலியுறுத்துவது போன்று கூறினால் அது ‘ஸுஹ்ருத் ஸம்ஹிதை’. இவ்விரண்டையும் விட, இதமாகவும், மதுரமாகவும், தர்மத்தை சர்க்கரையில் தோய்த்த மாத்திரை போன்று கதையில் தோய்த்துச் சொல்லும் போது அது காந்தா ஸம்ஹிதை; உள்ளே இருக்கும் கசப்பு மருந்து நமக்குத் தெரியாமல் வயிற்றுக்குள் போனபின் தனக்கான வேலையைச் செய்வது போல காவிய ரஸத்தை நாம் அனுபவிக்கும் போது நமக்குத் தெரியாமலே நமக்குள் தர்மங்கள் ஊறும்.

உயர்ந்த கவி வெறும் ரஞ்சகமாக மட்டுமில்லாமல் அதற்குள் தர்மமான பலனும் இருக்கிற மாதிரி எழுத வேண்டும் என்பது மஹா பெரியவாளின் வாக்கு. மேற்குறிப்பிட்ட மூன்று ஸம்ஹிதைகளும் ஒருங்கிணைந்த நூல்கள்தான் திருப்புகழும், ராமாயணமும் என்று அறுதியிட்டுக் கூறலாம். எனவே, மாமனும், மருகனுமாகிய ராமபிரான்-முருகப்பெருமான் இருவரின் சொலற்கரிய புகழை ஒரு சேர எடுத்துக்கூறும் திருப்புகழ் சந்தப்பாக்களை, ‘நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்படி’ ஓதுவார்களுக்கு இருவரது திருவருளும் பரிபூரணமாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

பாலகாண்டம் 37ம் ஸர்க்கம், 31, 32வது ஸ்லோகங்களில் விசுவாமித்திரர், ராம-லக்ஷ்மண ருக்கு கந்த அவதாரக் கதையை விவரிக்கிறார். சாதாரணமாக வால்மீகி இன்ன கதையைக் கேட்டதற்கு இன்ன பலன் என்று கூறுவதில்லை. ஆனால், விதிவிலக்காக இங்கு கூறுகிறார். ‘‘குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும், புண்ணியத்தையும் கொடுக்கும். அப்பா காகுத்ஸா! இந்தப் பூலோகத்தில் ஒரு மனிதன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்து விட்டால் போதும், தீர்க்காயுள், புத்ர, பௌத்ர ஸௌ பாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்து விடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடன் நித்ய வாஸம் செய்யலாம்’’ என்கிறார்.

இதே போன்று ராமாயண காவியத்தை எவன் செவிகளால் கேட்கிறானோ அவன், பிரயாகை முதலான சகல தீர்த்தங்களிலும், கங்கை முதலான புண்ணிய நதிகளிலும், ஸ்னானம் செய்பவன் என்ன புண்ணியம் பெறுவானோ அதை எல்லாம் பெறுவான் என்று கூறக் கேட்டிருக்கிறோம். சைவ-வைணவ சமரசத்தையே குறிக்கோளாக கொண்டு விளங்கும் திருப்புகழ்ப் பாடல்களையும், அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் ராமாயணக் குறிப்புகளையும் படிப்போர்க்கு, மேற்கூறப்பட்ட அனைத்து நலன்களும் ஒரு கல்லில் இரு கனியெனக் கிட்டும் என்பது உறுதி.

No comments:

Post a Comment