Contact Us

Name

Email *

Message *

Tuesday 28 January 2014

தை அமாவாசை


பிதுர்க்கடன் புண்ணியமானது


பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

கயாவில் தசரதருக்கு ராமர் செய்த பித்ரு தர்ப்பணம்


தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கமுனிவரின் தலைமையில் செய்தார். யாகத்தின் பயனாய் கிடைத்த பாயாசத்தை பட்ட மகிஷிகள் கோசலை, கைகேயிஇருவரும் தங்கள் பங்கு போக மீதியை சுமித்ராவிற்குக் கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். ஆனால், இந்த நால்வரின் பிறப்புக்கு வேறொரு காரணமும் சொல்வதுண்டு. ஒருபிள்ளையைப் பெற்றுக் கொண்டால், அந்த பிள்ளை பிதுர் தர்ப்பணத்தை கயா ÷க்ஷத்திரத்தில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது மிகவும் விசேஷம். அதனால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் போடுவான் என்று தசரத சக்கரவர்த்தி நினைத்தார். அதனாலேயே தனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என்று முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உண்டு. இதன்மூலம் பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்கு  செய்யவேண்டும். ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது என்ற உண்மைகள் வெளிப்படுகிறது. ஒரு பிள்ளை செய்யாவிட்டாலும் இன்னொரு பிள்ளையாவது முன்னோருக்குரிய பிதுர்க்கடனை அவசியம் செய்ய வேண்டும் ஆகிய கருத்துகளை அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியைச் செய்யும் பாக்கியத்தை  பெற்ற பிள்ளை நான்காவது பிள்ளையான சத்ருக்கனனே.ராமனும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தசரதருக்கு இறுதி கடமையைச் செய்யமுடியாமல் போனது. ராமன் மீண்டும் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்த பிறகு, தசரதருக்காக கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது.


முன்னோர் வழிபாட்டில் காகத்தின் பங்கு


காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!

முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்


முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக  பெறமுடியும்.

பிள்ளைக்குரிய முழு தகுதி எது?


கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது.  ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன.  ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.

இறந்த பின்னும் தொடரும் மனித வாழ்வு


சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசிவேண்டியும் சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். சிரார்த்தம் கொடுக்கும்போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போது தானே நிச்சயம் சிரத்தை (அக்கறை) உண்டாகும். கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில், ....ஆண்டில்..... அயனத்தில்... ருதுவில்.... மாதத்தில்... பட்சத்தில்... திதியில்.... வாரத்தில்.... நட்சத்திரத்தில் எனது பெற்றோரான ... பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது பிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதே சிரார்த்தமந்திரம். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.


தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு


முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு... குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யவிடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு. ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே! என்றார். ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு, என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்? என்றார். ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன், என்றான். நாமும் அப்படித்தான்! நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.

தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே


தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி ஆகிய கடல் க்ஷேத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணி நதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காக செல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே தண்ணீரில் இறங்கி விடக்கூடாது. கரையில் நின்று தண்ணீரை முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். புனித நீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று  சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாக கருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். நதிகளை அசுத்தமாக்கக்கூடாது.

தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்?


பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.


அமாவாசையில் ஒரு முழு நிலவு


திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகைய தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன நாள்? என்று கேட்டார். அம்பிகையின் முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தவர் பவுர்ணமி என்று சொல்லிவிட்டார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் அன்று அமாவாசை. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார். அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.

தை அமாவாசை பிதுர் தர்ப்பண பலன்கள்!


உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலு<டன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!



நன்றி: தினமலர்

No comments:

Post a Comment